முறையிடச் செல்லும் பெண்களிடம் பாலியல் சேட்டைகள் செய்யும் யாழ்ப்பாண பொலிஸார்.
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_9860.html
பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் தமது பாதிப்பு மற்றும் பாதிப்படையச் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறையிடச் செல்லும் பட்சத்தில் அவர்கள் கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
அத்துடன் இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் அது தொடர்பில் முறையிடச் செல்லும் போது, அவர்களின் தொலைபேசி இலக்கங்களை கேட்பதாகவும், அவர்களின் வீடுகளுக்கு வருவேன் எனப் பெண்களை அச்சுறுத்துவதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் உரிமைகளும் செய்தி அறிக்கையிடலும் என்ற தொனிப் பொருளில் யாழ்ப்பாணப் பிராந்திய ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இவ்வாறு பெண்கள் மீது பாலியல் வன்முறைகளோ அல்லது வேறு ஏதாவது துன்புறுத்தல்களோ இடம்பெறும் பட்சத்தில் ஊடகங்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு அதனை வெளிக் கொண்டு வர வேண்டும் எனவும், சிறுவர் மீதான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நடைபெறும் சிறுவர் உரிமை மீறல்களை ஆதாரத்துடன் வெளிக் கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அரச அதிபர், அதனை பெற்றுக் கொடுப்பதற்கும் பாடுபட வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணப் பொலிஸாரின் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் இவ்விடத்தில் நாம் பிரஸ்தாபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ்வாறு யாழ்ப்பாண அரச அதிபர் தெரிவித்த கருத்துக்களை வரவேற்கும் அதேவேளை தனது நிலையில் இருந்து மாறி, தான் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டவில்லை எனக் குத்துக்கரணம் அடிக்காது ஊடகங்கள் மீதும் பலி சுமத்தாது இருந்தால் இன்னும் வரவேற்கத்தக்கது.
