மாவீரர் நாள்: எம் காவிய நாயகர்களைக் கௌரவிக்கும் தினம்! கருணைமிகு மறவர்களை தூபமிட்டுத் தீபமேற்றித் துதிபாடும் வாரம்


ஈழத் தமிழரின் வரலாற்றிலே, உலகத்தமிழரின் சரித்திரத்திலே மறக்கவோ அல்லது மட்டுப்படுத்தவோ முடியாத ஓர் உணர்வுமிக்க, வரலாற்றுப் பெருமைதரும் நாள்தான் நாம் ஆண்டுதோறும் அனுசரிக்கும் இந்த மாவீரர் நாள்.


எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பெறமுடியாத புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் பெற்ற எம் காவிய நாயகர்களைக் கௌரவிக்கும் தினமல்லவா இந்தக் கார்த்திகை 27.

இனக்கலவரங்கள் மூலம் சிங்களக் காடையரும் சிங்கள அரசும் சேர்ந்து நடாத்திய இன அழிப்பைத் தடுக்க, எமது பாரம்பரிய கலாச்சாரத்தை சீர்குலைக்கும் அரசின் போக்கை நிறுத்த, தமிழர் பிரதேசத்திலான சிங்களக் குடியேற்ற்த்தைத் தடுத்து நிறுத்த ஆயுதம் எந்திய எம் சரித்திர நாயகர்களை நினைவுகூரும் வேளைதானே நாம் வருடாவருடம் அனுஷ்டிக்கும் மாவீரர் வாரம்.

காலத்தின் தேவையை உணர்ந்து தேசியத்தலைவரின் கைவண்ணத்தில் உருவான எமது வீரத்தின் சின்னங்களை எந்தவித வேறுபாடுமின்றி, எல்லாத் தமிழரும் ஒன்றாகப் பூஜிக்கும் ஓர் புனிதம் நிறைந்த புண்ணிய தினமல்லவா. கட்சி வேறுபாடின்றி அந்தக் கலங்கரை விளக்குகளை, கார்த்திகைப் பூவுக்கு உரித்தான அந்தக் கருணைமிகு மறவர்களை தூபமிட்டுத் தீபமேற்றித் துதிபாடும் நாளல்லவா இந்தக் கார்த்திகை 27.

அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதும் ஓர் அறவழிப் போராட்டம்தான் என்பதை எமக்கும், உலகுக்கும் உணர்த்திய உன்னதப் பிறவிகளல்லவா இந்த மனித மாணிக்கங்கள். மனிதரூபத்தில் வந்து மாயாஜாலங்கள் புரிந்த எம் மந்திரவாதிகள். சாவிலும் வாழும் சந்ததி என்ற பெருமையை எமக்குத் தேடித்தந்த எம் காவலர்கள். இன்று நாம் பூஜிக்கும் எம் இதய தெய்வங்கள்.

அந்த மனித தெய்வங்களின் விந்தைமிகு செயல்களை, வீரம் செழிந்த நிகழ்வுகளை, பாசம் நிறைந்த பங்களிப்பை நினைவுகூரும் அதேவேளை, எம்மவர் வீரவரலாற்றை எமது இளைய தலை முறைக்கும் இயல், இசை, நாடக வடிவிலே எடுத்தியம்பி உணரவைக்கும் வாரமல்லவா இந்த மாவீரர் வாரம். ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒன்றுபட்டு பங்கு கொள்ளும் இந்த நிகழ்வு கட்சி பேதமின்றி தமிழர் என்ற ரீதியில் நடாத்தப்பட வேண்டிய ஓர் தமிழருக்கான புனித நாளல்லவா.

தேசியத் தலைவரும், மாவீரர்களும் நம் எல்லோருக்கும் உரியவர்கள் என்பதை உணர்ந்து எமது செயற்பாட்டை முன்னெடுப்பதுதானே முறை. அவர்களை உரிமை கொண்டாட எல்லோருக்கும் உரிமையுண்டு என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அந்த உரிமையை மறுக்கவோ அல்லது மட்டுப்படுத்தவோ எவருக்கும் உரிமையில்லை என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

அதேவேளை, போட்டிபோட்டு மாவீரர் கொள்கைக்கு எதிராக, ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் நாம் பிரிந்து செயற்படுவோமானால் அந்தத்தெய்வங்களை, அவர்கள் எமக்காகச் செய்த தியாகங்களை, அவர்களின் அர்ப்பணிப்புக்களை நாம் அவமதிப்பதாகவே அமைந்துவிடுமல்லவா.

உரியவர்களை உள்ளடக்கி, ஒற்றுமைக்கு வழிவகுக்கும் விதத்தில், ஒரு குடையின்கீழ் இந்நிகழ்வை நடாத்தி அந்த மனித மாணிக்கங்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வோமாக.

உடைந்த மனதுடன் மனிதசங்கிலியை உருவாக்கிய பாசம்மிகு பரம்பரையே!

மாவீரர் வாரம், ஒவ்வொரு வீட்டிலும் எம் தியாக தீபங்களுக்குத் தீபமேற்றித் தியானியுங்கள், சமயத் தலங்களுக்குச் சென்று அவர்களுக்காக வழிபடுங்கள், மாவீரர் தினம் நடைபெறும் இல்லங்களுக்குச் சென்று உங்கள் நன்றிக் கடனைச் செலுத்துங்கள்.

அதே வேளை, இறைமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தனிநாட்டை விரைவில் அமைப்போமென மாவீரர்களை மதிக்கும் அத்தனை உறவுகளும் இன்றே சபதம் எடுத்து செயற்பட வேண்டும். ஒற்றுமை கலந்த கடமையுணர்வுடன் எமது இறுதிப் போரான அரசியல்ப் போரைக் காலம் கடத்தாது முடிவிற்குக் கொண்டுவர தேசியத் தலைவரின் இலட்சியப் பாதையில் பயணிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுடன் தாமதியாது இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

உண்மையுடனும், உறுதியுடனும் உழைத்த கார்த்திகைப் பூவுக்கு உரித்தானவர்களின் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழரும் உறுதிபூண்டு செயற்பட வேண்டும். இதுகண்டு, மானமொன்றே வாழ்வென வாழ்ந்த எம் மாவீரர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும்.

கலாநிதி ராம் சிவலிங்கம்
துணைப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item