தமிழ்நாட்டில் சிறீலங்கா பொருள்கள் புறக்கணிப்பு – புலம்பெயர் நாடுகளில்??
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_6993.html
சிறீலங்கா அணியைப் புறக்கணிப்போம் (Boycott Sri Lanka Team) என்ற பரப்புரைக் குழுவைச் சேர்ந்த ராஜ்குமார் பழனிசாமி, நகர கூட்டுறவுச் சமூகத்தின் சிறப்பதிகாரி ஆர்.ஜி.சக்தி சரவணனை நேரில் சந்தித்து கொடுத்த மனுவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசாங்கத்தின் மீது இந்திய அரசாங்கமும், வெளிநாடுகளும் பொருண்மியத் தடை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமது கடிதத்தில் சுட்டிக்காட்டிய ராஜ்குமார், சிறீலங்கா பொருள்கள் சென்னையிலுள்ள குறித்த கடைகளில் விற்பளை செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து சிறீலங்கா பொருள்களை சென்னையிலுள்ள தமது அனைத்துக் கடைகளில் இருந்தும் அகற்றுமாறு உத்தரவிட்டுள்ள சக்தி சரவணன், அவை சிறீலங்காவில் நேரடியாகக் கொள்வனவு செய்யப்பட்டாது, உள்ளுரில் வர்த்தகர் ஒருவரிடம் கொள்வனவு செய்யப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறீலங்கா அரசாங்கத்தால் நேரடியாகப் பாதிக்கப்படாத தமிழ்நாடு உறவுகள், தமிழர்கள் என்ற ஒரேயொரு உணர்வோடு தமது நேரங்களை செலவிட்டு இவ்வாறான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் சிலர் சிறீலங்கா அரசாங்கத்திற்கு நாளாந்தம் பல மில்லியன் வருவாயை ஈட்டிக்கொடுக்கும் வகையில், சிறீலங்கா பொருள்களைக் கொள்வனவு செய்தல், சிறீலங்கன் வானூர்தி சேவையைப் பயன்படுத்துவது, கொழும்பு சென்று வர்த்தகத்தில் ஈடுபடுவது என பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
