கனடாவில் ‘பொங்கு தமிழ்’ காலத்தின் கட்டளை இது-நெற்றிக்கண்



“பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு.”இது பாரதிதாசன் வரிகள். கனடியத் தமிழருக்காகவே அன்று எழுதி வைத்தார் போலும். கனடியத் தமிழர் துணிச்சலுடனும், ஒற்றுமையுடனும், உற்சாகத்துடனும் செயற்பட வேண்டிய தருணமிது.

‘பொங்கு தமிழ்’ ரொறன்ரோவில் நிகழவுள்ளதாக அறியப்பட்டவுடனேயே அதற்கெதிராக செயற்படத் தொடங்கி விட்டனர் இங்குள்ள மகிந்த அரசின் கைக்கூலிகள். இதனை நிகழவிடாமல் செய்வதற்கு அனைத்து வழிகளையும் - சாம பேத தான தண்டம் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். புலம்பெயர் தமிழரின் அரசியல் அழுத்தம் காரணமாக மகிந்தவின் இனவெறி அரசு மேற்குலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், புலம்பெயர் எழுச்சியை மழுங்கடிப்பதற்கும் திசைதிருப்புவதற்கும் இந்த நாடுகளில் தமிழர்களுக்குள் பிளவை ஏற்படுத்தி தமிழின எழுச்சியையும், தமிழ் உணர்வையும் மழுங்கடிக்க சகல பிரயத்தனங்களையும் மேற்கொண்டு வருகின்றது.

தமிழரை பகடைக் காய்களாக வைத்தே இதனை மகிந்த அரசு. மேற்கொள்வது கவலைக்குரியது

2009 மே 18ஆம் திகதிக்குப் பின்னர் புலம்பெயர் மக்களின் வேதனைகள், சோதனைகள் கலந்த குழப்ப நிலையை நன்றாகவே பயன்படுத்த ஆரம்பித்துள்ளது சிஙகள அரசு.

இலங்கையில் தமிழர்களுக்குள் இருந்தே ஒட்டுக்குழுக்களை உருவாக்கி எவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைத்ததோ, அதேபோல், புலம்பெயர் தமிழர்களுக்குள்ளிருந்தே புல்லுருவிகளை உருவி எடுத்து, பல குழுக்களை உருவாக்கி புலம்பெயர் தமிழர் தேசியக் கட்டமைப்புகளை சிதைக்க முனைகின்றது மகிந்த அரசின் அனைத்துலக உளவு நிறுவனம். (இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்வோம்.)

மகிந்த அரசின் உளவு நிறுவனத்தினால் உருவி எடுக்கப்பட்ட கைக்கூலிகளே மே 18இற்குப் பின்னர் புலம்பெயர் தமிழின எழுச்சியை அடக்குவதற்கும் குழப்புவதற்குமாக பற்பல தில்லுமுல்லு வேலைகளிலும் கட்டுக்கதைகளைப் புனைவதிலும் அடாவடித்தனங்களை மேற்கொள்வதிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

1. தேசிய செயற்பாட்டாளர்களின் கடந்தகால, நிகழ்கால செயற்பாடுகள் பற்றி அவதூறான பொய்க் குற்றச்சாட்டுக்களை பரப்பி அவர்களின் நற்பெயரை மாசுபடுத்துகின்றனர். இவ்வாறான பரப்புரைகளை இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் ஊடாக மேற்கொண்டு வருகின்றனர்.

2. செயற்பாட்டாளர்களைத் தொலைபேசி ஊடாகவும், நேரடியாகவும் மிரட்டுவதுடன், தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3. தமிழ் தேசியம்சார் ஊடகங்களின் ஆசிரியர்கள், ஒலிபரப்பாளர்கள், பொறுப்பாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது மிரட்டல்கள்களும் நேரடித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

4. தமிழ் தேசியம்சார் நிகழ்வுகளைக் குழப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது

5. தேசியம்சார் நிகழ்வுகள் நடைபெறும் அதேநாளில், அதையொட்டிய சாயலில் நிகழ்வுகளை நடத்தி மக்களைக் குழப்புகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஒன்றாகவே கனடாவில் ‘பொங்கு தமிழ்’ நிகழ்வு அறிவிக்கப்பட்டவுடன், இங்கு சிறிலங்கா அரசின் கைக்கூலிகளினால் ‘பொங்கு தமிழ்’ நிகழ்வு பற்றி பல வாந்திகளும் புரளிகளும் பரப்பி விடப்பட்டுள்ளதுடன் அதன் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1. ‘பொங்கு தமிழ்’ சுவரொட்டிகள் கைக்கூலிகளினால் கிழிக்கப்பட்டுள்ளன.

2. ‘பொங்கு தமிழ்’ செயற்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

3. ‘பொங்கு தமிழ்’ விளம்பரங்களை வெளியிட்ட ஊடகங்களினதும் செயற்பாட்டாளர்களினதும் வதிவிட முகவரிகள் மிரட்டும் பாணியில் வெளியிடப்பட்டுள்ளன.

4. ‘பொங்கு தமிழ்’ ஒழுங்கமைப்புக் கூட்டம் நடைபெற்றபோது அதனைக் குழப்புவதற்கு முற்பட்டுள்ளனர்

5 ‘பொங்கு தமிழ்’ நடைபெற்றால் கொன்சர்வேட்டிவ் அரசினால் தற்போது தமிழ் மக்கள் சார்பாக எடுத்திருக்கும் செயற்பாடு பாதிக்கப்படும் என்ற ரீதியில் பொய்ப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

2009 மே 18 தேசியத்தலைமை மௌனிக்கப்பட்ட பின்னர் மகிந்த அரசு புலம்பெயர் மக்களின் எழுச்சி கண்டு அச்சமடைந்துள்ளது. அவர்களின் கைக்கூலிகளது மிரட்டல்களுக்கும் வெருட்டல்களுக்கும் அஞ்சாது, கட்டுக் கதைகளுக்கு எடுபடாது தமிழ் மக்கள் எதிர்வரும் (ஒக்ரோபர்) 29ஆம் திகதி ஒன்றுபட்டு தமது தமிழ்த் தேசிய உணர்வைக் காட்ட வேண்டியது தலையாய கடமை,; புலம்பெயர் மக்களின் தேசிய எழுச்சியையும் அவர்களின் ஒற்றுமையையும் மகிந்த அரசினால் மழுங்கடிக்கவோ சிதைக்கவோ முடியாது என்பதை பொங்கு தமிழ் ஊடாக உணர்த்துவோம்.

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

‘பொங்கு தமிழ்’ இன்று ஏன் அவசியம்?

‘பொங்கு தமிழ்’ ஏன், எதற்காக, எப்படி உருவானது என்ற வரலாற்றினைச் சற்று நோக்குவது பொருத்தமானது.

இரண்டு தசாப்தங்களாக விடுதலைப் புலிகள் சுதந்திர தமிழீழத்துக்காக போராடி வந்த நிலையில், விடுதலைப் புலிகள் வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தை முழுமையாக தமது ஆளுகையில் ஒரு நடைமுறை அரசை அமைத்து, நிர்வகித்து வந்த நிலையில், 2000ஆம் ஆண்டு டிசம்பரில் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை பிரகடனம் செய்தனர். ஆனால், சந்திரிகா அரசு அதனை உதாசீனம் செய்தது. அவ்வேளையில்; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவ அச்சுறுத்தல்களையும் மீறி ‘பொங்கு தமிழ்’ நிகழ்வை வெற்றிகரமாக 2001 ஜனவரி 17இல் நடத்தி வரலாறு படைத்தனர். சிங்கள அரசுக்கு மட்டுமன்றி அதற்குத் துணைபோன நாடுகளுக்கும் இதனூடாக ஒரு செய்தி அனுப்பப்பட்டது.

அது, உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழ் மண்ணிலிருந்து வெளியேற வேண்டுமென்பதும், நேரடிப் பேச்சினூடாக அரசியல்த் தீர்வு காணப்பட வேண்டும் என்பதாகவும் அமைந்தது.

அவ்வாண்டு டிசம்பரில் ‘பொங்கு தமிழ்’ எழுச்சியின் பயனாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பேராதரவு பெற்று உயர்ச்சி பெற்று தேர்தலில் வெற்றிவாகை சூடியது.

2001ஆம் ஆண்டு ‘பொங்கு தமிழ்’ தமிழீழத்தில் ஏனைய மாவட்டங்களுக்கும் எழுச்சி பெற்றதோடு தமிழர் புலம்பெயர்ந்து வாழும் பிரதேசங்களிலும் பொங்கியெழுந்து பிரவாகித்தது. அதனை அடியொற்றி 2004 செப்டெம்பர் 25இல் கனடாவிலும் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டு வரலாறு படைத்தது ‘பொங்கு தமிழ்’.

2008ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசம் சிங்கள இராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட நேரம் அதனை வெளியுலகுக்கு தெரியப்படுத்துமுகமாகவும், தமிழர்களுக்கான தாயகம், தேசியம், தன்னாட்சியை வெளிப்படுத்துமுகமாகவும் தமிழரின் புகலிட நாடுகளில் ‘பொங்கு தமிழ்’ மீண்டும் எழுச்சி கண்டது.. ரொறன்ரோவில் இரண்டாவது பொங்கு தமிழ் 2008 ஜூலை 5ஆம் திகதி மாபெரும் நிகழ்வாக இடம்பெற்றது.

இன்று தமிழத் தேசிய தலைமை மௌனிக்கப்பட்ட நிலையில் மகிந்த அரசின் சர்வாதிகார ஆட்சியில் திறந்தவெளிச் சிறைக்குள் மக்கள் அடக்கப்பட்ட சூழ்நிலையில் அவர்களின் அவலநிலையினை வெளியுலகுக்கு எடுத்தியம்ப வேண்டியது தமிழர் தம் தலையாய கடமை.

பின்வரும் காரணங்களுக்காக நாம் ‘பொங்கு தமிழ்’ நிகழ்வை நடத்த வேண்டும் என காலம் கட்டளையிடுகின்றது.

1. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையிலும் சிங்கள இராணுவ முகாங்கள் தொடர்ந்தும் தமிழர் பகுதிகளில் இருப்பதுடன், மேலும் புதிய முகாங்கள் உருவாக்கப்படுகின்றன. சோதனைச் சாவடிகள் தொடர்ந்தும் உள்ளன.
இதனை வெளியுலகுக்குச் சொல்ல வேண்டாமா?

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

2. தமிழர் தாயகத்திலேயே எங்கள் உறவகளை சிறுபான்மையாக்கும் நோக்குடன் சிங்களக் குடியேற்றங்கள் துரித கதியில் மேற்கொள்ளப்படுகின்றன. வடக்கு-கிழக்கு இணைப்பை நிரந்தரமாக பிரிப்பதற்காக வெலிஓயா மாவட்டம் என்று புதிதாக சிங்கள மாவட்டம் உருவாக்கப்படுகின்றது. இங்கு சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.
இதனை அனைத்துலகத்துக்கும் தெரியப்படுத்த வேண்டாமா?

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

3. தமிழர் பிரதேசத்தில் காணும் இடமெல்லாம் புத்தர் சிலை நாட்டி, புத்தர் கோயில்கள் அமைக்கப்படுகின்றன. சில வருடங்களில் எங்கள் தேசம், ‘சிங்கள பௌத்த நாடு’ என அழைக்கப்படும் அபாயம் உருவாக்கப்படுகின்றது.
இதனைத் தடுத்து நிறுத்த உலக ஆதரவை திரட்ட வேண்டாமா?

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

4. அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் 400வரையான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பௌத்த சான்றுகள் எனக்கூறி புத்தர் சிலைகளை இரவோடு இரவாகப் புதைத்துவிட்டு, பின்னர் அவைகளை தோன்றி எடுத்துக்காட்டி, பௌத்த நாடாக நிருபிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது
இதனை உலகுக்குச் புட்டுக்காட்ட வேண்டாமா?

பொங்கி எழு தமிழா பொங்கி எழு


5.வன்னியில் கைதுசெய்யப்பட்ட மக்களும் முன்னாள் போராளிகளும் ஆயிரக்கணக்கில் சித்திரவதை முகாமங்களிலிருந்து இன்னமும் விடுதலைசெய்யப்படவில்லை, இவர்களின் பெயர் விபரங்களும் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இவர்களை விடுவிக்க வேண்டாமா?
உலகுக்குக் கூற வேண்டாமா?

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

6. விடுதலையான மக்களும் முன்னாள் போராளிகளும் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை. புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. ஆனால், மீள்குடியேற்றப்படுகின்றனர், புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றனர் என வெளியுலகுக்குப் பொய் உரைக்கிறது மகிந்த அரசு.
இதனை உலகுக்கு உரக்கக் கூறவேண்டாமா?

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

7. போர் காரணமாக வெளியேறிய மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை. உதாரணத்துக்கு சம்பூரில் 10,000 ஏக்கர் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை. அங்கு அனல்மின் நிலையம் அமைக்கப்படுகின்றது.
இதனை வெளியுலகுக்கு எடுத்துரைக்க வேண்டாமா?

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

8. உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. போர் முடிவுற்றும் இன்னும் மக்கள் குடியேற அனுமதியில்லை.
மக்கள் குடியேற அனுமதி பெற்றுக்கொடுக்க வேண்டாமா?
சுர்வதேச அரங்குக்கு இதனை எடுத்துரைப்போம்.

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

9. தமிழர் பிரதேச வளங்கள் சட்ட விரோதமாக மகிந்த சகோதரர்களினால் சூறையாடப்;படுகின்றது. காங்கேசன்துறையில் முருகக்கற்களும்;, திருகோணமலையில் இல்மனைட்டுகளும் கொள்ளையிடப்படுகின்றது.
இதனை தடுக்க வேண்டாமா?
இதனை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டாமா?
பொங்கி எழு தமிழா பொங்கி எழு

10 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையை சிறிலங்கா அரசு இழுத்தடித்து உதாசீனப்படுத்துகின்றது. காலவரையறைக்குள் சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று, சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்.என்பதை மகிந்த மறுக்கின்றார்
இதை உலகுக்கு இடித்தரைக்க வேண்டாமா?

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

11 வெளிநாடுகளில் வதியும் ஈழத்தமிழ் மக்களின் காணிகளை உடனடியாகப் பதியவேண்டும் எனக்கூறி அவற்றைச் சுவீகரிக்க ஆயத்தமாகிறது மகிந்த அரசு
எங்கள் காணிகளை பறிகொடுக்கப் போகிறோமா?
முடியாது! வெளி உலகுக்கு உரத்துக் கூறுவோம்

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

மகிந்த அரசின் இவர்வாறான தமிழின அழிப்பு நடவடிக்கைகளையும் திறந்தவெளிச் சிறையில வாழும் தாயகத் தமிழர் மக்கள் வெளியுலகுக்கு கூறமுடியாது வாய் மூடி ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். இக்கொடுமைகளை வெளியுலகுக்கு எடுத்துச் சென்று உடனடித் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களின் சகோதர்களாகிய எம்மையே சாரும்.

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான எமது சகோதரர்களின் உயிரைப் பலி எடுத்த மகிந்த அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும். அதற்கான முயற்சிகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும், மனித நேயங்கொண்ட மேற்கத்தைய நாடுகளாலும் மேற்கொள்ளப்படுகின்ற போதும், அது உறுதிப்படுத்தப்படவில்லை, முழுமை பெறவுமில்லை. எனவே, புலம்பெயர்ந்து வாழும் உருத்துக்காரரான நாம் மகிந்த அரசை போர்க் கூண்டில் ஏற்றுமாறு மீண்டும் மீண்டும் அறைகூவல் விடுவோம். குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் வரை ஓயமாட்டோம் என சபதமெடுப்போம்.
பொங்கி எழு தமிழா பொங்கி எழு

கனடிய அரசுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். சிறிலங்காவின் போர்க்குற்ற விவகாரத்தில் கனடா, சுயாதீன வெளிப்படையான சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என்பதைப் பல தளங்களிலும் வலியுறுத்தி வருவதுடன், சிறிலங்கா போர்க்குற்ற விடயத்தில் ஐ.நா.வின் செயற்றிறனின்மைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது, அத்துடன், கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை நேரடியாகச் சந்தித்து கனடாவின் கரிசனையை தெரிவித்ததுடன் மாற்றத்தை உடன் காண விரும்புவதாகவம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28௩0 ஆகிய நாட்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிலும் கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் அவர்கள் இறுதிக்கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி மகிந்த ராஐபக்சவுடன் கலந்துரையாடப்படலாம் என செய்திகள் கூறுகின்றன. எனவே, எமது கனடிய அரசின் இந்த ஆதரவுச் செயற்பாட்டுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். ‘பொங்கு தமிழுக்கு’ மகுடம் வைத்தாற்போல் கனடிய அரசுக்கு நன்றி கூற பொங்கி எழுவோம்.

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே 30 வருடங்களுக்கு மேலாகப் போராடி வீழ்ந்து விதையாகினர் எமது மாவீரர்கள். அதற்காகவே பல இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மாண்டு போயினர். ஆனால், இன்று சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் காணி மற்றும்;, காவற்றுறை அதிகாரமற்ற வெறும் போலித் தீர்வு பற்றியே இழுத்தடிப்புப் நடைபெறுகின்றது. இதனையும் சிலபல அழுத்தங்கள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும் அபாயமும் காணப்படுகின்றது.

சர்வதேச மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தையில் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தீர்வு காணப்பட வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்துவோம். அதனையே உரத்துச் சொல்வோம்.
எனவே, ‘பொங்கு தமிழ்’ நிகழவுக்கான காலமும் நேரமம் இதுவே.

காலம் இட்ட கட்டளை இது.

ஒக்டோபர் 29 எமக்கான நாள்.

ஒற்றுமையை எதிரிக்கு உணர்த்தும் நாள்.
பொங்கி எழும் உணர்வை – எமது உறவுகளுக்குக் காட்டும் நாள்.
ஏங்கள் எழுச்சியை உலகுக்குக் புகட்டும் நாள்.

பொங்கி எழு தமிழா பொங்கி எழு

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item