அரசியல்வாதிகளின் கண்களுக்கு புலப்படாத யாழ் பெண்களின் வாழ்வுரிமை.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடு விடுபட்ட, இந்த இரண்டு ஆண்டுகளில், தமிழர்களின் தாயகப்பகுதி அனைத்தும், என்றுமில்லாதவாறு சிறுமைப்படுத்தப்பட்டு வேற்றுக்கிரக நிலையையொத்து, தலைகீழ் மாற்றமடைந்து வருகிறது. அத்தியாவசியமான பல்வேறு அடிப்படை உரிமை அம்ஷங்கள் நிறையவே அடிபட்டு போய்விட்டன, இருந்தும் அவற்றை தவிர்த்து, மிக முதல்த்தரமான தமிழர்களின் முதலீடான கல்வி, மொழி, கலாச்சாரம், ஆகியன முன்றும் திட்டமிட்டபடி சிதைக்கப்பட்டு வருகிறது.

மக்களை வழிப்படுத்தி நடத்த நம்பகமான ஒரு தலைமையுமில்லை,தமிழர்களின் சேவையாளர்கள் எனக்கூறும், தமிழ் அரசியல்வாதிகள், மற்றும் தமிழ்பேசும் உயர் அரச அதிகாரிகள், கண்முன்னே தமது சந்ததியும் இந்த பேரழிவுக்குள் அமிழ்ந்து போய்க்கொண்டிருப்பதை சிந்திப்பதாகவும் தெரியவில்லை.

பதட்டமான இந்த நிலையில், தமிழர்களுக்கான திடமான அரசியலை முன்னெடுக்கவேண்டிய காத்திரமான பொறுப்பு, ஒவ்வொரு தனி மனிதனின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும், தமிழர் தேசியக்கூட்டமைப்பு உண்டு.

இருந்தும் அவர்கள் பழமையிலிருந்து விடுபட்டு ஒரு வித்தியாசமான தூர நோக்கு பார்வைக்கு செல்ல முடியாமல் குளம்பியிருக்கின்றனர், அத்துடன் இன்னும் ராஜபக்க்ஷ + இந்தியாவின், ஏமாற்று திட்டத்துக்குள் மூழ்கி, தப்பிக்கவும் முடியாமல் , வெல்லவும் முடியாமல் தலை நகரத்தை மையமாக்கி அறிக்கை அரசியலில் காலம் கடத்தும் சூழல் மாற்றமில்லாமல் தொடர்கிறது.

ஏதும் முடியாது என இவர்கள் உணரும் பட்ஷத்தில், எல்லாவற்றையும் கலைத்துவிட்டு வரட்டு கௌரவத்தையும் தள்ளி வைத்துவிட்டு சமகாலத்தில் ஒரு தளம்பாத சக்தியாக இலங்கை அரசியலில் துணிவுடன் எவருக்கும் அடிபணியாமல் துணிவுடன் குரல்கொடுத்துவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மற்றும் சிவாஜிலிங்கம், போன்றோரை முன்னிலைப்படுத்தி அவர்களின் ஆலோசனையுடன் இணைந்து, தலைநகரத்தில் இருந்தே சில காரியங்களை தைரியத்துடன் முன்னெடுக்கலாம் என்ற உபாயமும் தோன்றுகிறது.

தமிழர் பிரதேசம் எங்கும் புத்தர் சிலைகளும், இராணுவ ஆக்கிரமிப்புக்குளளாகி, சிங்களப்பெயர் மாற்றம் கொண்ட ஊர் பெயர்ப்பலகைகளும், வந்தேறு சிங்கள மக்கள் மற்றும் இராணுவத்தினரின் அதீத நடமாட்டங்களும் சேர்ந்து, தமிழ்ப்பிரதேசங்கள் வறிய சிங்களக்கிராமங்களாக தோற்றப்படுத்தி நெஞ்சம் கனக்கிறது.

மறு புறத்தே கிறீஸ் பூதங்களை காவல்த்தெய்வங்களாக மதித்துத்து, கிராமம் நகரம் அனைத்தும் மாலை ஆறு மணியுடன் அடங்கிவிடுகிறது.

மட்டக்களப்பில் கருணா, பிள்ளையானின், துணை குழுக்களின் உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த பரிமாண மாற்றம் டக்கிளஸ் ஐயாவின் உதவியுடன் யாழ் குடாவை மையங்கொண்டு விட்டது.

பொறுமையிழந்து வித்தியாசமாக விடை தேட முற்பட்ட மாணவர் அமைப்பின் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர். சுப்பிரமணியம் தவபாலசிங்கம், அவர்கள் ஞாயிற்றுக்கிழமை 15,10,2011 அன்று யாழ் கந்தர்மடம் பகுதியில் வைத்து சிறீலங்கா இராணுவ புலனாய்வுத்துறை, மற்றும் டக்கிளஸ் தேவானந்தாவின் உதவிக்குழு காடையர்களினால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.

அவை போக இந்த வருடத்தில் மட்டும் யாழ். மாவட்டத்தில் 114 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், 175 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றதாக பதிவுகள் சொல்கின்றன,, குறிப்பிட்ட கற்பழிப்பையொத்த பாரதூரமான குற்றச்சாட்டுக்கள், நடவடிக்க ஏதும் அற்று வெற்றிகரமாக தகவல்கள் மட்டும் பதிவாகி யுள்ளது. அந்த பெற்றோரின் துயரை துடைக்க எந்த அபயமும் இலங்கை ஜனநாயகத்தில் இல்லை.

தனி மனிதனாக விடை காணமுடியாத இவ் வினாக்களுக்கு, வெகுஜன குழுக்கள் அமைத்து கலந்துரையாடக்கூடிய சூழலும் இராணுவ அச்சுறுத்தலால் தமிழர் பிரதேசங்களில் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

தீர்வு காணவேண்டியவர்கள். தமிழர்களுக்கான அரசியலை தம்மகத்தே கொண்டுள்ள அரசியல்வாதிகள் என்பதுதான் ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணக்கருத்து. அது ஒன்றுதான் ஓரளவு பாதுகாப்பான ஆயுதமாகவும் காணலாம், ஆனாலும் ஏதோ காரணங்களால் பொறுப்பான அரசியல்வாதிகள் எதையும் விவாதப்பொருளாக்காமல் ஒவ்வொன்றையும் தவிர்த்து, சிறு சம்பவங்களாக காண்பித்து முடிக்க முயலுகின்றனர்.

சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வின் தாக்கமும் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சினையாக உருவகப்படுத்தப்பட்டு அவர்களுடனேயே மறைக்கப்பட்டே வருகிறது, இவை தொடரும் பட்ஷத்தில் தமிழினத்தின் அனைத்து அடித்தளமும் நிர்மூலமாகும் அபாயம் உணரப்படக்கூடும்.

நடந்து முடிந்த எந்த ஒரு அத்துமீறல் அனீதிக்கும் சரியான நீதிக்குட்பட்ட தீர்வு, சம்பந்தப்பட்ட மக்கள் எவருக்கும் கிடைத்திருக்கவில்லை.

2010 ஏப் ல், சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத், ஈபிடிபி ஆயுதக்குழுவினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார், குற்றவாளிகளை இனங்கண்டு வழக்கு தொடுத்தபோதும் அப்படுகொலை தொடர்பான அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தின் நீதிபதியும் அதிரடியாக மாற்றப்பட்டார்.

வழக்கும் நீர்த்துப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. சாட்சிகள் சாட்சியமளிக்க முன்வரவில்லை, பின்னணியில் சம்பந்தப்பட்டோரால் மிரட்டல்களும் கொலை அச்சுறுத்தலும் கபிலநாத்தின் பெற்றோருக்கு இருந்ததாக தகவல்கள் கசிந்திருந்தன.

அடுத்து வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றிய கைதடியைச் சேர்ந்த தர்சிகா சரவணன், என்ற வறிய குடும்பத்தை சேர்ந்த 26 வயது பெண் உத்தியோகத்தர், தூக்குப் போட்ட நிலையில் சடலமாக ஜூலை 2010 மீட்கப்பட்டுடிருந்தார். அவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் சிங்கள வைத்தியர் குறித்த பெண்ணை மிரட்டியதாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுதிய பின்னர் தூக்கில் மாட்டப்பட்டிருக்கலாம் என வலுவாகச் சந்தேகிக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கு சிங்கள வைத்தியரே காரணம் என அங்கு பணியாற்றிய ஏனைய பணியாளர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது அப்பகுதியில் குழமியிருந்த மக்கள் பிரஸ்தாப வைத்தியரைக் கைது செய்யும்படியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பொலிசார் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.

அந்த வழக்கு எந்த நிலையில் உள்ளது என்பது கூட எவருக்கும் தெரியாது. அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது. அந்த குடும்பத்தின் துயரத்தை யாருடன் பகிர்ந்து கொள்வது?

இவை குறிப்பிடத்தக்க ஒருசில சம்பவங்களாகும், அவை தவிர பல ஆயிரக்கணக்கான மக்கள் மட்டக்களப்பு. திருகோணமலை, வன்னி. கிளிநொச்சி, என விரிந்து யாழ்ப்பாணம்வரை கற்பழிப்பும் கொலைகளும். கொள்ளைகளும் ஆட்கள் காணாமல்ப்போதலும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

அனைத்தும் சிறு சம்பவங்களாகவே அரசாங்கமும். தமிழ் அரசியல்வாதிகளும் வரையறுத்து கழித்துக்கொண்டிருக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டபடி கருணா, மற்றும் பிள்ளையான், குழுவினர் எந்த அசம்பாவிதமான செய்தியையும் வெளியே வரவிடாமல் அரசுக்கு காப்பரணாக நின்று உதவுகின்றனர், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதேசங்கள் இராணுவத்தின் கட்டளைக்கமைய, சூரிய உதயமும் அஸ்தமனமும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

வெளி நாட்டுப்பிரதிநிதிகள் விஜயம் செய்து, செய்தி வெளிவரக்கூடிய யாழ்க்குடாநாடு சில செய்திகளை வெளியே கக்கிவிடுவதால், அதை தடுத்து சமாளிக்கும் பொறுப்பு யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், அவர்களிடம் சிங்கள அரசு வழங்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் வரலாற்றில் இயல்பாக மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல், இரானுவ அதிகாரிகளின் திட்டத்திற்கொப்ப நடந்து, மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுக்காத போக்கு கொண்டவர் என இமெல்டா அவர்களின் மேல் பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன,

உள்ளூர் வெளிநாட்டு பத்திரிகை ஊடகங்களும் இமெல்டா அவர்க்ளை மோசமாக விமர்சித்து கருத்து வெளியிட்டு வருகின்றன. உச்சமாக இமெல்டா அவர்கள் தனிமனித ஒழுக்கம் இல்லாதவர் என்றும் சில ஊடகங்கள் விமர்சித்ததுண்டு.

சமீபத்தில் சர்வதேச நெருக்குதல் காரணமாக சிவில் நிர்வாகத்தை தமிழ் பேசும் பொலிஸாரிடம் கொடுக்கும்படி பல உலகநாடுகள் ஸ்ரீலங்காவுக்கு கோரிக்கை வைத்திருந்தன. கண்துடைப்புக்காவது அதை நிறைவேற்றவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள அரசுக்கு உண்டானது.

யாழ்ப்பாணத்திலுள்ள சில பெண்களும் துணிவுடனும், பொருளாதார நோக்குடனும் முன்வந்து பொலிஸ்துறையில் தோற்றினர். தமிழ்மொழி மட்டுமே படித்தறிந்திருந்த அவர்களுக்கு சிங்களமும் பயிலவேண்டுமென்ற கட்டுப்பாடு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டது. அதற்கும் அவர்கள் சம்மதித்திருந்தனர்.

குறிப்பிட்ட தமிழ் பெண் பொலிஸாருக்கு. கிழமை நாட்களில் சிங்கள மொழி வகுப்புக்கள் யாழ் பொலிஸ் நிலையத்துள் நடந்து வந்தது, வழமையாக சிங்கள மொழி கற்பிக்கும் சிங்கள் உயர் அதிகாரி ஒருவர் அத்துமீறி தமிழ் பெண் பொலிஸருடன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்துள்ளார், என்று ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள். பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பின்னணியில் பொலிஸ்துறைக்குள் தமிழரை உள்வாங்காமல் அச்சுறுத்தும் உளவியல் ரீதியான தந்தரம் என்றும், தமிழ்ப்பெண்களை சீண்டினால் கேட்பதற்கு எவரும் முன்வரப்போவதில்லை என்ற இளக்காரமும் காரணமென்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தையும் பரிசீலிக்கும் இடத்தில் இருக்கும் யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா, அரசாங்கத்தின் செயற்பாடுகளை வழிமொழிந்து மௌனம் காத்து வருகிறார்.

இறுதியாக கிடைக்கும் தகவல்களின்படி யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் கணக்கற்ற விபச்சார விடுதிகள் செயற்பட்டு வருவதாக அச்சம் வெளியிடப்பட்டிருக்கிறது, அது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பாலியல் ரீதியான வக்கிரங்களை தோற்றுவித்து இளம் பெண்களை சீர் கெடுக்கும் நடவடிக்கையும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

உடல் உள ரீதியாக ஸ்திரமற்ற தன்மையையும் கலாச்சார ரீதியான தமிழர்களை வீழ்த்தும் உத்தியாகவே இவற்றை பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ் பெண்ணான அரசாங்க அதிபர் இமெல்டா அவர்களும். தமிழர்களின் அரசியல் ஆசான்களும் முன்வந்து இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தவறினால், தமிழ் ஈழத்திற்காக உயிர் நீத்த பெரும் போராட்டம் வீணாகிப்போகும் அபாயம் உண்டு.

இவற்றை உள்ளூர் அரசியல்வாதிகள் மட்டுமல்லாது புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் இருந்து ஈழ மக்களுக்காக வேலைத்திட்டங்களை அமைப்பு ரீதியாக நிறுவியிருக்கும் நாடு கடந்த அரச நிர்வாகத்தினரும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரும் முதல்த்தரமான வினைப்பொருளாக எடுத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளனர்.

தவறினால் காலப்போக்கில் காலம் ஏதோ ஒன்றை தோற்றுவித்து நிறைவு காணக்கூடும்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item